.jpg/:/cr=t:0%25,l:0%25,w:100%25,h:100%25/rs=w:1280)
தொன்மைமிகு செம்மொழித் தமிழ்
மேன்மையுறு இலக்கியத் தடங்கள்தோறும்
கடைச்சங்க நூல்கள் செப்புகின்ற
தமிழர்தம் வாழ்வுதனை நன்கறிந்தோம் !
குறள் கூறும் வாழ்வியலில்
குன்றமெனத் தமிழர் மாண்பு
ஈராயிரம் ஆண்டுகளாய் இத்தரையில்
முத்திரைப் பதித்ததை நாமறிந்தோம் !
இரட்டைக் காப்பியங்கள் மானுடத்தின்
அகக்கண்ணைத் திறந்துவைத்து
அறிவார்ந்த சிந்தனையை மண்மீது
பரவவிட்டச் செய்திகளை மறப்போமா?
இன்றளவும் செம்மொழியில் வரிவடிவம்
பரிணாம வளர்ச்சியில் புகழீட்டி
பூலோகம் குரலெழுப்பும் வாழ்த்தொலியால்
புவிமாந்தர் மகிழ்வெய்தி திளைக்கின்றார் !
இலக்கிய நூல்களின் சீர்மிகு வரிகளை
ஒலிவடிவம் சிதைக்காது போதித்து
சொற்சுவையும் பொருள்சுவையும் குன்றாது
இக்காலத் தலைமுறையை வாழ்விப்போம் !
….கா.ந.கல்யாணசுந்தரம்